Monday, September 14, 2009

வடக்கின் வசந்தம் திட்டம் : ஓர் அறிமுகம்

மாதவி

நான்காம் ஈழப் போர் 2009 மே மாதம் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இந்தப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர். சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கை அரசால முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009 இல் முன் வைத்தது. போரின் மூலம் தான் கைப்பற்றப்போகும் வன்னிப் பெருநிலத்தையும், ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ் குடா பகுதியையும் தனக்கு சாதகமான நிலப்பகுதியாக எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே 7 ஆம் தேதியன்று இலங்கை அரசு ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தம்பியும், ஆலோசகரமுமான பசில் ராஜபக்சாவின் தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதே அந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.

இந்த செயற்குழுவானது மூன்று நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது:

* வட ஈழத்தில் இராணுவ முகாம்களை நிறுவுவதும், சிங்களர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை நிறுவுவதும், கன்னி வெடிகளை அகற்றுவதும் இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம்.

* முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீண்டும் வன்னி நிலத்தில் குடியேற்றுவதும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவுவதும் இரண்டாம் நோக்கம்.

* வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலை ந்டத்துவதும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதும் மூன்றாம் நோக்கமாகும்.

வடக்கின் வசந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் மேற்கண்ட மூன்று நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் போக்கில் சாலைகள், போக்குவரத்து மற்றும் பொது நிறுவனங்களின் கட்டிடங்களை சீரமைக்கும் பணியிலும், மின்சாரம், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை அமைக்கும் பணியிலும், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும். வட ஈழத்தின் பாசன வசதியைப் பெருக்குவதும், கல்வி மற்றும் கலாச்சாரத்தை திட்டமிட்டு ந்டைமுறைப்படுத்துவதும், காவல்துறை, தபால்துறை, வங்கி மற்றும் கூட்டுறவுத் துறையை அமைப்பதுவும், தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிப்பதும், தொழிற்கல்வியை அளிப்பதுவும் இந்தத் திட்டத்தின் பிற பணிகளாம்.

இந்தப் பணிகள் மூன்று காலகட்டங்களில் செயல்படுத்தப்படும்.

* முதல் கட்டப் பணிகள் 2009 ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும்.
* இரண்டாம் கட்டப் பணிகள் 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2011 ஆம் ஆண்டில் முடிவடையும்.
* மூன்றாம் கட்டப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்படும்.

வடக்கின் வசந்தத் திட்டத்தில் இந்திய அரசின் பங்கு :

இலங்கை அரசால் வடக்கின் வசந்தம் திட்டம் முன்வைக்கப்பட்ட மறு நாளே இந்திய அரசு இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்தது. மே 23 ஆம் தேதியன்று இந்தத் தொகை 500 கோடி ரூபாயாகக் கூட்டப்பட்டது. ஜூன் 25 ஆம் தேதி பசில் ராஜபக்சா புதுதில்லி வந்திருந்த போது இந்தத் தொகையை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும் மன்மோகன் அரசு முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாயின.

முகாம்களில் அடைக்கப்பட்ட காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை அமைப்பது, கண்ணி வெடிகளை அகற்றுவது என்பன இந்திய அரசு வடக்கின் வசந்தம் தொடர்பாக எடுத்த முதல்கட்டப் பணிகளாகும். போரில் அழிவுக்குள்ளான கட்டிடங்களையும், விளைநிலங்கள் மற்றும் பாசன ஆதாரங்களையும் மீளுருவாக்குவது அது எடுக்கவுள்ள அடுத்த்க்கட்டப் பணிகளாகும். இந்தப் பணிகள் அனைத்திலும் ஈழத் தமிழ் மக்கள் ஈடுபடுத்தப்படுவர். அவர்களை இந்தப் பணிகளுக்காகப் பயிற்றுவிக்கும் செயலை இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

மருத்துவப் பணிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியக்குழு தன் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பி விட்டிருக்கிறது. கன்ணிவெடிகளை அகற்ற பூனாவைச் சேர்ந்த “ஹோரைசன்” மற்றும் நோய்டாவைச் சேர்ந்த ”சர்வத்ரா” ஆகிய தனியார் நிறுவனங்கள் வன்னிப் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளன.

வடக்கின் வசந்த வேளாண் பணிகளை இலங்கை அரசுடன் சேர்ந்து திட்டமிடுவதற்காக ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை ஜனாதிபதி ராஜப்க்சாவை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். பின்னர் அது குறித்த விரிவான கட்டுரையை இந்து நாளிதழில் அவர் ஜூன் 16 ஆம் தேதியன்று எழுதினார்.

ஆகஸ்டு மாதத் துவக்கத்தில எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ள இந்திய வேளாண் நிபுணர் குழு இலங்கைக்கு செல்லவிருந்தது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எதிராக சீமான் தலைமையிலான ”நாம் தமிழர் இயக்கம்” மேற்கொண்ட பரப்புரையாலும் , அறிவித்த முற்றுகைப் போராட்டத்தாலும் அதிர்ந்துபோன அவர் இலங்கையில் தற்சமயம் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மாறாதவரை தான் அங்கு போகப்போவதில்லை என்று ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று பகிரங்கமாக அறிவித்தார்.அவரது முடிவால் இந்தியாவின் வேளாண் குழு இலங்கைக்குள் செல்வது தாமதமாகியிருக்கிறது. இருப்பினும் ஆகஸ்டு இறுதியிலோ அல்லது செப்டம்பர் துவக்கத்திலோ அது இலங்கைக்குப் பயணமாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

போரினால் அழிவுக்குள்ளான கட்டிடங்களையும், கட்டமைப்புகளையும் புனரமைப்பதற்காக இந்தியாவின் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் (Construction Industry Development Council - CIDC ) என்ற அமைப்பானது இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்துடன் ஜூலை 22 ஆம் தேதியன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று அதே நிறுவனம் இலங்கைக் கட்டுமான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற அமைப்புடன் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து 70 ஆயிரம் இளைஞர்களைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காகப் பயிற்றுவிப்பதகாக உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

( இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடமிருந்து கேட்டுக்கொண்ட 190 கோடி டாலரைக் கொடுக்க விடாமல் மேற்கத்திய நாடுகள், அதிலும் குறிப்பாக அமெரிக்காவும் இங்கிலாந்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் காரணம் காட்டி தடுத்து வந்தன. அந்தப்பணத்தை இலங்கை அரசுக்கு வாங்கித் தர இந்திய அரசு பெருமுயற்சி எடுத்தது. கடைசியில் இலங்கை அரசு சர்வதேச நிதியத்திலிருந்து கேட்டுக்கொண்டதொகையைக் காட்டிலும் ஜூலை 25 ஆம் தேதியன்று 260 கோடி டாலரை அளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இது இலங்கை அரசு கேட்டிருந்த கடனைக் காட்டிலும் 70 கோடி டாலர் அதிகமாகும். . இந்திய அரசு செய்த இந்த உதவிக்குப் பதிலாகவே ஜூலை 22 ஆம் தேதியன்று CIDC யுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு இசைந்தது. )

CIDC அமைப்பானது இந்திய அரசின் திட்டக் கமிஷனால் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் 90 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 30 நிறுவ்னங்கள் அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் உள்ளன.

CIDC யில் உறுப்பினர்களாகத் தமிழ் நாட்டில் இருந்து இயங்கி வரும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் நிர்வாகங்களிடத்தில் CIDC யின் ஒப்பந்தம் எவ்வாறு தமிழ் இனத்திற்கு எதிராக உள்ளது என்ற கருத்தை விளக்கும் பணி தமிழ் நாட்டின் ஈழ ஆதரவாளர்களின் முன் இன்று உள்ள தலையாய பணியாகும்.

இந்தியாவின் தெற்கு மின் வலையத்தையும் இலங்கையின் தேசிய மின் வலையத்தையும் 300 கிலோ மீட்டர் நீள உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மூலம் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய இலங்கை அரசுகள் ஆகஸ்டு மாத இறுதியில் கையெழுத்திட முடிவு செய்துள்ளன. இதன் மூலம் மதுரையும் அனுராதபுரமும் மின் கம்பிகளால் இணைக்கப்படும். மூன்றரை வருடங்களுக்குள் முடிக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் மதுரையிலிருந்து முதலில் 500 மெகாவாட் மின்சாரமும், பின்னர் 1000 மெகாவாட் மின்சாரமும் இலங்கைக்கு அனுப்பப்படும்.

சர்வதேச நிதி நிறுவனங்களின் பங்கு :

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வட ஈழ மக்களின் உடல்நல சேவைக்காக ஜூன் 24 ஆம் தேதியன்று இலங்கை அரசுக்கு உலக வங்கி 2.4 கோடி டாலரைக் கடனாக அளித்துள்ளது.

போரில் அழிவுக்குள்ளாக்கப்பட்ட வட ஈழத்தின் சாலைகள், மின்சாரம், குடிநீர் ஆகிய மீள் கட்டுமானத்திற்காக வசந்தம் திட்டத்திற்கு 30 கோடி டாலர் கடனை ஆசிய வளர்ச்சி வங்கியானது ஜூலை 23 ஆம் தேதியன்று அளித்துள்ளது.

சீனாவின் பங்கு :

ஜூன் 5 ஆம் தேதியன்று சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள China Shenyang International Economic and Technical Corporation (CSYIC) நிறுவனம் இலங்கைக்கு 50 கோடி டாலரை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதாக அறிவித்தது. போரின்போது வன்னி மக்களை அழிக்கப் பெருமளவில் உதவிய சீனாவின் Chengdu FT-7 போர்விமானங்களை முதல் முதலில் வடிவமைத்தது இந்த நகரில் உள்ள ஷென்யாங் ஏர்க்ராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனமே.

மலிவு விலைக் குடியிருப்புகளை இலங்கை அரசின் அதிகாரிகளுக்குக் கட்டிக் கொடுப்பதற்காகவே இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வன்னி நிலத்தில் மட்டுமே அடுத்த ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் சிங்கள அதிகாரிகளும், அவர்தம் குடும்பத்தினரும் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் வீடு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதற்காகவே இந்தக் கடன் தொகையின் பெரும்பகுதி உபயோகப் படுத்தப்படவுள்ளது. முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட கட்டிடச் சுவர்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றைக் கொண்டு வன்னியின் சிங்கள இராணுவ முகாம்கள் கட்டப்படும் என்று தெரிகிறது.

இதற்குத் தேவையான 50% பொருட்களையும் தொழிலாளர்களையும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்பது இந்தக் கடன் வழங்கப்படுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். ஆக, வரப்போகும் காலங்களில் வன்னி நிலமெங்கும் சீனர்களைப் பார்க்க முடியும்.

இந்தக் கடன் தொகையைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதியன்று சீனாவின் EXIM வங்கியானது சீனர்களால் நுரைச்சோலையில் கட்டப்பட்டு வரும் அனல் மின்நிலையத்திற்கு மேலும் 89 கோடி டாலர 20 வருடக் கடனாகக் கொடுத்துள்ளது.

அடுத்து என்ன ?

இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டமானது வட ஈழ மக்களை அவர்களது பாரம்பரிய நிலப்பகுதியிலிருந்து அந்நியப்படுத்தும் திட்டமேயன்றி வேறல்ல.

சிங்கள அரசின் இந்த வஞ்சகத் திட்டத்தில் இந்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது. அநீதியான இந்தத் திட்டத்திற்கு மாற்றாக வட ஈழ மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் மாற்றுத் திட்டம் ஒன்றினை தமிழ் மக்களும், இந்திய அரசும் முன் வைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவிடும் சர்வதேச சக்திகளை எதிர்த்து உலக அளவில் இயங்கி வரும் மக்கள் இயக்கங்களுடன் இணைந்து இனிவரும் காலங்களில் தமிழ் அமைப்புகள் அனைத்தும் செயல்பட வேண்டும்.

---------------

No comments:

Post a Comment

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது