Sunday, September 13, 2009

இந்திய அரசின் துக்ளக் வெளியுறவுக் கொள்கை - தவியிடம் அசரீரியின் நேர்காணல்

அசரீரி:

வணக்கம் தவி அவர்களே! இலங்கையில் இன்றைய நிலவரம் என்ன என்று கூறுவீர்களா?

தவி :

வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நம் சொந்தங்கள் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கும் அவலங்கள் பற்றி முன்பு ஊடகங்கள் அதிகமாக செய்தி வெளியிட்டு வந்தன. இன்று அவர்களை மீளக் குடியேற்றுவது பற்றிய செய்தியே அதிகம் செய்திகள் வருகின்றன.

முகாம்களில் உள்ள நம்மவர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் இன்று கூடியிருக்கின்றனவே தவிர குறையவில்லை. முகாம்களில் உள்ள சுமார் 35 ஆயிரம் குழந்தைகளின் மத்தியில் இன்று மணல்வாரி அம்மை பரவத் தொடங்கியிருக்கிறது. நல்ல உணவையும், மருந்துகளையும் நாமும்,உலகம் முழுதும் உள்ள நம்ம் சொந்தங்களும், சர்வதேச நாடுகளும் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசு வன்மத்துடன் மறுத்தே வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நம் சொந்தங்களை மீளக் குடியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ( சிங்களர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் ) குழுவிற்கான தலைவருமான பசில் ராஜபக்சா ஜூன் 25 ஆம் தேதியன்று புது தில்லி வந்திருந்தார். ஐரோப்பாவில் இருந்து நம் சொந்தங்களால் வணங்கா மண் என்ற கப்பலில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் அவர் அப்போது உறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த உறுதிமொழியை அவரது அரசு இன்றளவும் காப்பாற்றவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அந்தப் பொருட்கள் யாவும் கொழும்புத் துறைமுகத்தில் கேட்பாரற்று சீரழிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் உணவும் மருந்துகளும்கூட தனக்கு அவசியமில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் அவை சென்னைத் துறைமுகத்தில் அனாதியாகக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன. இந்திய அரசின் கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்ப்பதில்லை என்ற முடிவுக்கு ராஜபக்சா அரசு போயிருப்பதையே இந்த நடவடிக்கைகள் யாவும் உணர்த்துகின்றன.

ஆனால் இன்றளவும் ராஜபக்சா அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்க இந்திய அரசு முன்வர மறுக்கிறது. தனது சொல்லுக்கு இலங்கை அரசு செவி சாய்ப்பது இல்லை என்று தெரிந்தும்கூட, இந்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஏன் தயாராயில்லை என்பதுதான் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் செயலாக உள்ளது.

அசரீரி :

ராஜபக்சா அரசு இந்திய அரசை மதிப்பதில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்துடன் (Construction Industry Development Council - CIDC) இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகம் வன்னிப் பெருநிலத்தின் அழிந்த கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதே...

தவி :

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு எப்பேற்பட்ட காவடிகளையெல்லம் தூக்க வேண்டி வந்தது என்பதை நினைத்துத்தான் இன்று உலகமே சிரியாய் சிரித்துக் கொண்டிருக்கிறது .

போர் முடிந்த ஐந்தாவது நாளே 10 கோடி டாலர் நிதி உதவியை அளித்து ராஜபக்சா அரசைக் குளிர்விக்கும் பணியை இந்திய அரசு தொடங்கியது. அடுத்த கட்டமாக, மே 27 ஆம் தேதியன்று ஐ.நா.சபையில் உலக நாடுகளால் ராஜபக்சா அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டப் போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான கோரிக்கையை முறியடிப்பதில் சீன, பாகிஸ்தான் அரசுகளைவிடத் தான்தான் முன்னணியில் நிற்பதாக இந்திய அரசு இலங்கை அரசிடம் காண்பித்துக் கொண்டது. மேற்கத்திய நாடுகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சர்வதேச நிதியத்தின் கடன் தொகையை அரும்பாடு பட்டு, தன்னையே அமெரிகாவின் கைகளில் பிணையாக ஒப்படைத்து இன்று அது பெற்றுக் கொடுத்திருக்கிறது.

எகிப்து நாட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜூலை 15 ஆம் தேதியன்று ராஜபக்சாவை நம் பிரதமர் சந்தித்தபோது இதைத்தான் பட்டியல் போட்டுக் காண்பித்ததாகவும், அவர் கூறியதைப் போல சர்வதேச நிதியத்தின் கடன்தொகையைப் பெறுவதில் இலங்கை அரசு உண்மையாகவே வெற்றி பெற்றால் இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்திற்கு இலங்கையில் அனுமதி அளிப்பதாகவும் ராஜபக்சா கூறியதாக சொல்லிக்கொள்கிறார்கள். கூத்து அதோடு நிற்கவில்லை. ஜூலை 22 ஆம் தேதி தாய்லாந்தில் நடந்த ASEAN மாநாட்டில் கலந்துகொண்ட சீன வெளியுறவு அமைச்சரைப் பார்த்த உடனேயே நம் வெளியுறவு அமைச்சரான கிருஷ்ணா “பங்காளீ” என்றுபோய்க் கட்டிப் பிடித்து அங்குவந்திருந்த (சீனர்களைத் தம் ரத்த உறவாகப் பார்க்கும்) இலங்கை வெளியுறவு அமைச்சரைப் பரவசப் படுத்தியிருக்கிறார். மாநாட்டிலிருந்து திரும்பிய சில நாட்களிலேயே இலங்கைக்கு இன்னும் கூடுதலாகப் பணம் அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அதாவது, வளையத்தைத் தாண்டினால் மட்டுமே இறைச்சி அளிக்கப்படும் என்று பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் சிங்கம் தன் ரிங் மாஸ்டரிடம் அந்த இறைச்சியைப் பெறுவதற்காக போடும் கூத்துகளைப் போலவே மன்மோகன் - ராஜபக்சா அரசுகளுக்கு இடையிலான காட்சிகள் இன்று நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய அரசைத் தவிர்த்து வேறு எவரும் ராஜபக்சாவைத் தம் ரிங் மாஸ்டராகப் பார்ப்பதில்லை. ராஜபக்சாவும், அவர்தம் மந்திரிமாரும் சீன அரசிடமும், மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளிடமும் காட்டும் குழைவினைப் பார்க்கும்போது நமக்கே பலசமயம் கூச்சமாக இருக்கிறது.

ஜூன் 5 ஆம் தேதியன்று சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள China Shenyang International Economic and Technical Corporation (CSYIC) நிறுவனம் இலங்கைக்கு 50 கோடி டாலரை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதாக அறிவித்தது. போரின்போது நம் சொந்தங்களை அழிக்கப் பெருமளவில் உதவிய சீனாவின் Chengdu FT-7 போர்விமானங்களை முதல் முதலில் வடிவமைத்தது இந்த நகரில் உள்ள ஷென்யாங் ஏர்க்ராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனமே.


மலிவு விலைக் குடியிருப்புகளை இலங்கை அரசின் அதிகாரிகளுக்குக் கட்டிக் கொடுப்பதற்காகவே இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வன்னி நிலத்தில் மட்டுமே அடுத்த ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் சிங்கள அதிகாரிகளும், அவர்தம் குடும்பத்தினரும் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் வீடு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதற்காகவே இந்தக் கடன் தொகையின் பெரும்பகுதி உபயோகப் படுத்தப்படவுள்ளது. இந்தப் பணியை மேற்கொள்ளும்போது தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் தொழிலாள்ர்களில் 50% சீனாவில் இருந்து பெறப்படவேண்டும் என்பது இந்தக் கடன் வழங்கப்படுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். ஆக, வரப்போகும் காலங்களில் வன்னி நிலமெங்கும் சீனர்களைப் பார்க்க முடியும்.

இந்தக் கடன் தொகையைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதியன்று சீனாவின் EXIM வங்கியானது சீனர்களால் நுரைச்சோலையில் கட்டப்பட்டு வரும் அனல் மின்நிலையத்திற்கு மேலும் 89 கோடி டாலர 20 வருடக் கடனாகக் கொடுத்துள்ளது.

இது தவிர, ஜூலை 1 ஆம் தேதி இலங்கையின் மிரிகாமா நகரில் சீன நிறுவனங்களுக்கான சிறப்பு மண்டலம் ஒன்றை அமைக்க சீனாவின் Huichen Investment Holdings Ltd நிறுவனத்திற்கு ராஜபக்சா அரசு அனுமதி அளித்தது. போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சா அரசால் வெளி நாடுகளின் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் முதல் அனுமதி இதுவே.

இந்த அனுமதி கொடுக்கப்பட்ட நாளில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹிதா சீனாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜூலை 2 ஆம் தேதியன்று China Institute of International Studies மையத்தில் “ போருக்குப் பிந்தய இலங்கை - நம் முன் உள்ள பாதை” என்ற தலைப்பில் பேசிய அவர் சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் ஜூலை 5 ஆம் தேதியன்று இலங்கைக்குப் போர் விமானங்களைக் கொடுத்து உதவிய செங்டு நகருக்கு சென்றார். அங்கு இலங்கை தூதரகத்தின் கிளை ஒன்றைத் திறக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக இலங்கை அரசின் மத்திய வங்கியும், சீன வளர்ச்சி வங்கியும் மிக முக்கியமான உடன்படிக்கை ஒன்றில் ஜூலை 25 ஆம் தேதியன்று கையெழுத்திட்டுள்ளன.

இவற்றை எல்லாம் விரிவாக நான் கூறுவது எதற்கு என்றால், இதுதான் “இந்தியாவுக்கு வந்திருக்கும் சோதனை” என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

மிரிகாமா என்ற பெயரை மட்டும் நம் சிவ சங்கர மேனனிடமோ, எம்.கே.நாராயணனிடமோ சொல்லிப் பாருங்கள்! அப்போது அவர்கள் எடுக்கும் ஓட்டம் ஒலிம்பிக் வீரர்களையும் கவலையடையச் செய்வதாக இருக்கும்.

சீனாவிடம் இந்தியா தோற்றுப் போனது இந்த மிரிகாமா நகரத்தில்தான். ஆச்சர்யமாக இருக்கிறதா?

2007 மார்ச் 26 ஆம் தேதியன்று வான்புலிகள் கட்டுநாயகா விமானதளத்தைத் தாக்கித் தங்களிடம் வான்படை இருப்பதை உலகுக்கு அறிவித்தார்கள். 2007 பிப்ரவரி 26 இல் இருந்து மார்ச் 4 வரை ராஜபக்சா மேற்கொண்டிருந்த சீனப் பயணமே சீனாவுடனான உறவில் திருப்புமுனையைக் கொடுத்தது. புலிகளின் விமானத் தாக்குதலை சாக்காக வைத்து இந்தியா தங்களுக்கு அளித்த ராடார் தமக்கு புலிகளின் விமானங்களைக் கண்டறிய உதவவில்லை என்று ராஜப்க்சா கும்பல் குறை கூறியது. இதற்குப் பதிலாக சீனாவிடம் இருந்து அதிநவீன ராடாரை வாங்கப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டு மிரண்டுபோன மன்மோகன் அரசு, உடனடியாக நாராயணன் - மேனன் குழுவை தூது அனுப்பியது. இவர்களின் சமாதானத்தை ராஜப்கசா கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அவர்கள் விருப்பத்திற்கேற்பவே சீனாவின் JY-11 ராடார் வாங்கப்பட்டு கொழும்பில் இருந்து வ்ட மேற்கே 44 கிலோமீட்டரில் உள்ள மிரிகாமா நகரில் நிறுவப் பட்டது.

இதில் விசேஷம் என்னவென்றால், இங்கு நம் நாட்டில் இன்று வரை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பெரிதாகப் பேசுகிறார்கள். காங்கிரஸ் அரசு ஏதோ இந்த ஒப்பந்தத்தை இலங்கையில் நிலைநாட்டுவது போல பல சமயங்களில் பாவ்லா செய்கிறது. இருப்பினும் உண்மை இதற்கு மாறாகவே உள்ளது.

இந்த ஒப்பந்தம் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்று கூறியது. ராஜபக்சா ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை உச்ச நீதிமன்றத்தின் மூலம் அவ்விரண்டு மாகாணங்களையும் இருவேறாகப் பிளந்ததுதான்.

இலங்கையின் துறைமுகங்களையோ, விமான நிலையங்களையோ இந்தியா தவிர்த்த பிற நாடுகளுக்குக் கொடுக்கக் கூடாது. இலங்கை எல்லையில் பிற நாடுகளின் இராணுவத்தையோ, உளவுப் பிரிவையோ அனுமதிக்கக் கூடாது. ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டிருந்த இந்த ஷரத்துகளைத்தான் ராஜபக்சா ஜனாதிபதி பதவியைப் பிடித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக, நயவஞ்சகமாக உடைத்தெறிந்தார். இதில் மிரிகாமா ஒரு அத்தியாயம் என்றால், நுரைச்சோலை அனல் மின்நிலையம், மன்னார் வளைகுடாவில் சீனாவின் பெட்ரோல் துரப் பணி, அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவை பிற முக்கிய அத்தியாயங்களாம்.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் பணி முதலில் இந்தியாவுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. 2005 ஆகஸ்டு மாதம் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா சீனா சென்றார். அந்தப் பயணத்தின்போது அன்று பிரதமராக இருந்த ராஜபக்சாவின் தூண்டுதலின் பேரில் நுரைச்சோலை அனல்மின்நிலையாத் திட்டம் ”இந்தியாவுக்கு இனி இல்லை; சீனாவுக்குத்தான்” என்று அதிரடியாக அறிவித்தார் . இந்த அதிரடி முடிவுக்கு மன்மோகன் அரசு எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக வருத்தத்தையே தெரிவித்தது. அதற்கு சமாதானமாக, திருகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் வேண்டுமானால் நீங்கள் அனல் மின் நிலையம் அமைத்துக் கொடுங்கள் என்றது இலங்கை அரசு. இந்திய அரசும் மிகவும் பவ்யமாக அதனை ஏற்றுக் கொண்டது. இருந்தாலும், அந்தப் பணியும்ம் கூட இன்றுவரை துவங்க இயலாத சூழ்நிலையே தொடர்ந்து வருகிறது.

ராஜீவ் காந்தியவர்கள் மிகவும் விரும்பி மேற்கொண்ட ஒப்பந்தமே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம். ஆனால் அவர் பெயரில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்மோகன் சிங் அரசு அதனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை எபதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ராஜீவ் அவர்களின் ஒப்பந்தத்தை உடைத்தெறியும் சதியில் அமெரிக்கர்களை ராஜபக்சா கையாண்டவிதமும், அதில் மன்மோகன் அரசிற்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியும், இதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட மாபெரும் பின்னடைவுமே இதன் உச்சபட்ச கிளமாக்ஸ்.

அசரீரி :

இலங்கையின் தலைவிதியைத் தாங்கள் சொல்வதைக் கேட்கும்போது மர்மக் கதையைக் கேட்பது போல இருக்கிறது. ஆனால் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

சரி. அந்த அமெரிக்கக் கிளைமாக்சை சொல்லுங்களேன்.

தவி :

2007 பிப்ரவரி 26 இல் இருந்து மார்ச் 4 வரை ராஜபக்சா மேற்கொண்ட சீனப் பயணமே நான்காம் ஈழப்போரின் திசையைத் தீர்மாணித்த மிக முக்கிய முக்கிய நிகழ்வாகும். மேலும் இந்துப் பெருங்கடல் பிராந்தியத்தின் பூகோள அரசியலை புரட்டிப் போட எத்தணித்ததும் அந்தப் பயணமே.

இந்தப் பயணத்தின்போது அவர் அம்பாந்தோட்டைத் துறைமுகப் பணி, சேதுக் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்த மன்னார் வளைகுடாவின் பெட்ரோல் துரப்பணி ஆகியவற்றை சீனர்களுக்கு வாரி வழங்கினார். மேலும், இந்தியாவின் ஏர்டெல் நிறுவனத்தை இலங்கைக்குள் அழைத்து வந்து சுமார் 150 கோடி டாலர் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளை சீன நிறுவனமான ஹூவாவெய்-க்குக் கொடுக்க தனது அரசு ஏற்பாடு செய்ய்துள்ளதையும் சீன அரசிடம் அவர் தெரிவித்தது இந்தப் பயணத்தின் போதுதான். கூடுதலாக, இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகாமில் அங்கமாக உள்ள ஜப்பானிய நிறுவனமான NTT-யை வெளியேற்றிவிட்டு அதற்குப் பதில் சீன அரசுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட மலேசியாவின் “மேக்சிஸ்” நிறுவனத்தை உள்ளே கொண்டுவருவதற்கும் தன் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை சீன அரசிடம் தெளிவு படுத்தியதும் இந்தப் பயனத்தின் போதுதான்.

ராஜபக்சா அரசின் இந்த செயல்பாடுகளைப் பெரிதும் பாராட்டிய சீன அரசு அதற்கான பரிசையும் உடனடியாக அறிவித்தது. சீனாவின் ஆயுத நிறுவனமான நோரிங்கோவிற்கு இலங்கை அரசு கொடுக்க வேண்டியிருந்த 200 கோடி டாலர் கடனை அது உடனடியாகத் தள்ளுபடி செய்தது. மேலும், தனது அதிநவீன ஆயுத நிறுவனமான பாலிகுரூப்ஸ் நிறுனத்திடமிருந்து எவ்வளவு ஆயுதங்களை வேண்டுமானாலும் கொள்முதல் செய்துகொள்ள இலங்கை அரசுக்கு அது அனுமதி கொடுத்தது. மேலும் பல அதிநவீனப் போர் விமானங்களையும் அது இலங்கைக்கு இலவசமாக அளித்தது.

இவற்றையெல்லாம் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் ஒப்பந்தத்தை முன்வைத்து சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?

இந்தக் கேள்விகளுக்கான பதில் தெளிவாகவே இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்தேயாக வேண்டும் என்று இந்தியா முழு மூச்சுடன் இயங்கி வருவதால் இலங்கை அரசை அது அந்த இயக்கத்தை ஒழிக்கும் வரை எந்தக் கேள்வியும் கேட்காது. எனவே இந்திய அரசைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அமெரிக்க அரசு இதனைக் கடுமையாக எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் கடந்த காலத் தலையீடுகளால் இந்துப் பெருங்கடலில் கால் ஊன்ற முடியாமல் போன அமெரிக்க அரசு, அங்கு சீன அரசு காலூண்டுவதை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

2002 ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் 1070 பெட்ரோல் விநியோக மையங்களில் சுமார் 100 மையங்களை சீன அரசுக்கு சொந்தமான சினோபெக் (Sinopec) நிறுவனத்துக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஈடுபட்டார். அதே கால கட்டத்தில் இலங்கையில் அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கும், போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிறப்ப, பழுது நீக்க அனுமதிக்கும் Acquisition and Cross Servicing Agreement (ACSA) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் அவர் அமெரிக்க அரசுடன் ஈடுபட்டிருந்தார். மேலும், 1980 களில் இந்திரா அம்மையாராலும், ராஜீவ் காந்தியாலும் அமெரிக்கர்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட திருகோணமலைத் துறைமுகத்தையும், அதன் எண்ணைக் கொப்பரைகளையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் ரகசியத் திட்டத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த ரகசியத் திட்டங்களை வாஜ்பாயி தலைமையிலமைந்த இந்திய அரசு தெரிந்து கொண்டது. இலங்கை அரசின் இந்த கபடச் செயலை அது 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வன்மையாகக் கண்டித்தது. இந்திய அரசு கொடுத்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை அரசு பின்வாங்கியது. திருகோணமலை எண்ணைக்கொப்பரைகளையும், சினோபெக்கிற்கு அளிக்கவிருந்த பெட்ரோல் விநியோக மையங்களையும் இந்தியாவின் “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு” அது கைமாற்றிக் கொடுத்தது. மேலும் தலைமன்னாருக்குத் தெற்கே அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. அமெரிக்காவுடனான ACSA ஒப்பந்தத்த்ம் குறித்த நடவடிக்கைகளை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

எனவே, அமெரிக்காவின் எதிர்ப்பைக் களைய வேண்டுமென்றால் 2002 ஆம் ஆண்டில் கிடப்பில் போடப்பட்ட ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திடும் செயலினை இன்று மன்மோகன் சிங் அரசினால எதிர்க்க முடியாது. ஏனெனில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அது அமெரிக்க அரசின் தயவை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறது. எனவே இந்தச் செயலானது, அமெரிக்க அதிர்ப்பை மட்டுப்படுதும் அதே நேரத்தில், நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்திய அரசினை அந்நியப்படுத்தவும் உதவும்.

ராஜபக்சா 2007 மார்ச 5 ஆம் தேதியன்று தன் சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். திரும்பிய அதே தினம், அவரது தம்பியும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் தலைவருமான கோத்தபாயா அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக்குடன் ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இலங்கையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமெரிக்கப் பேர்க் கப்பல்களும், போர் விமானங்களும் வந்து போவதற்கான அனுமதி கிடைத்தது. அணுசக்தி ஒப்பந்தம் என்ற கடிவாளம் இடப்பட்ட மன்மோகன் அரசால் இவை அனைத்தையும் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியவில்லை.

அசரீரி :

சரி. அடுத்து நடந்தது என்ன?

தவி :

2009 ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கு வெகுவேகமாக சரிந்து வருவதை திடீரென்று உணர்ந்து கொண்டது. அந்தத் தேதியன்றுதான் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றுமுழுதுமாக அழிப்பதற்குத் தன் முழு ஆதரவு உண்டு என்பதை சீன அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பைப் படித்த பிறகே இலங்கையில் ஏதோவொரு முக்கிய நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்து கொண்டது. அடுத்த நாள் அகதி முகாம்களுக்கான தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திர ஸ்ரீ நியமிக்கப்பட்ட செய்தி வெளியாகியது. உடனடியாக நாராயணன் - மேனன் குழு இலங்கைக்கு அனுப்பப் பட்டது. அவர்கள் இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஏப்ரல் 24 ஆம் நாள் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கைப் பிரச்சினையில் சீனா மேற்கொண்டுவரும் தலையீடு குறித்து முதல் முறையாகப் பேசினார். சீனாவின் நடவடிக்கைகளை தாம் கவனித்து வருவதாகவும், அவற்றை எதிர்கொள்ளும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பால் போர்க்கள நிலவரம் எதுவும் மாற்வில்லை.

2009 மே 13 ஆம் தேதியன்று இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்தது. மே 17 ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்ற சூழ்நிலையில் மே 15 ஆம் தேதியன்று பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்கக் கடற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியாவிற்கு வந்தார். அப்போது அவர் தெரிவித்த க்ருத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருந்தது.

”இந்துப் பெருங்கடலில் பல பேர் இருப்பதற்கு இடமிருக்கிறது. சீனாவை எதிரியாகக் கருதும் மனோநிலையைக் கைவிட வேண்டும். அவர்களும் நம் பங்காளிகளே என்று நாம் வாழ்ப் பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்கு என்ன அர்த்தம்?

இதுநாள்வரை இந்துப் பெருங்கடல் இந்தியாவின் ஆளுமாஇயின் கீழ் இருந்து வந்தது. இனிவரும் காலத்தில் அமெரிக்கா, சீனா போன்றவர்களும் இங்கு இயங்குவர். அவர்களை இந்தியா பங்காளிகளாகவே கருத வேண்டும். அவ்வாறு கருதாமல், அவர்களை எதிரியாகக் க்ருத முயற்சித்தால் விளைவுகள் விபரீதமாகக் கூட மாற வாய்ப்புண்டு என்பதே அவர் இந்திய அரியணையில் அடுத்து அமரப் போகிறவர்களுக்கு அவர் மூலம் அமெரிக்க அரசு கூறிய அறிவுரை.

ஆக அமெரிக்க அரசானது இன்று பூனைகளுக்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த குரங்கின் பாத்திரத்தை எடுத்துள்ளது. ஒருபுறம் சீனாவைப் பங்காளி என்று கூறி இந்தியாவின் தென் எல்லையை முற்றுகையிட அது சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்திய அரசின் அச்சத்தை வளர்த்து, அதனைத் தன்னை நோக்கி வரச்செய்யும் உக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவைக் கடிவாளம் இட்டு, சீனாவை முற்றுகை இடும் ஒரு அடிமையாக மாற்ற எத்தனித்திருக்கிறது.

இதற்கான நிகழ்வுகளே சமீபத்தில் நடந்தேறியுள்ளன. 2009 ஜூலை 9 ஆம் தேதியன்று இத்தாலியில் நடைபெற்ற வளர்ந்த 8 நாடுகளின் ( G8) மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பாதிக்கும் தீர்மானம் ஒன்று நீறைவேர்றப்பட்டது. இந்தத் தீர்மணத்தின்படி, அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் (NPT) கையெழுத்த்டாத நாடுகளுக்கு யுரேனியம் செரிவூட்டல், எரிந்து முடிந்த அணு எரிபொருளை மறுசுதிகரித்தல் ஆகியத் தொழில்நுடபங்களைக் கொடுக்கக் கூடாது.

அணுப்பொருள் விநியோகக் குழுமமானது (NSG) சென்ற வருடம் இந்தியாவிற்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிப்பதாக உறுதி கூறியிருந்தது. ஆனால், தற்சமயம் ஜி-8 நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானம் NSG அளித்த உறுதிமொழியை உடைத்தெறிவதாக உள்ளது.

ஜி-8 மாநாடு இப்படிப்பட்டதொரு முடிவினை எடுக்க அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தது எதற்காக?

ஜூலை 18 தொடக்கம் இந்தியாவிற்கு அமெரிக்க அரசின் காரியதரிசி ஹில்லாரி கிளிண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவை அமெரிக்கா மூன்று முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு அமெரிக்கா விற்கும் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அவை இராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப் ப்டுகின்றனவா என்பதைப் பரிசோதிக்க அமெரிக்கப் பரிசோதகர்களை இந்திய மண்ணிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் அம்மையாரின் இந்தியப் பயணத்தின் நோக்கம். மேலும் குஜராத்திலும், ஆந்திரத்திலும் அமெரிக்க நிறுவனங்களால் க்ட்டப்படவுள்ள தனியார் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டு சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப் பட்டால் அவர்களுக்கு அந்த மின் நிலையங்களை நடத்திவரும் அமெரிக்கக் கம்பெனி நஷ்ட ஈடு கொடுக்கத் தேவ்வையில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம்.

இவ்விரு ஒப்பந்தங்களிலும் மன்மோகன் அரசு எவ்விதப் பேச்சுமின்றி கையொப்பம் இட்டிருக்கிரது. இதற்குக் கைமாறாகவே, இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கான சர்வதேச நிதியத்தின் கடனை எதிர்த்து வந்ததை வாபஸ் வாங்கிக் கொண்டது.

இந்தியாவின் இந்த நற்செயலைப் பாராட்டியே ராஜபக்சா அரசு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்துடன் வன்னிப் பெருநிலத்தின் அழிந்த கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எனவே, மன்மோகன் அரசு கடந்த ஐந்தாண்டுகாலத்தில் தனது தவறான நடவடிக்கைகளால் இந்தியாவையும், நம் ஈழத்து சொந்தங்களையும் ஒருபுறம் ராஜபக்சாவிடமும், சீனாவிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்திருக்கிறது. மறுபுறம், இந்தியாவை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிமையாக மாற்றப் போகும் அணுசக்தி ஒப்பந்தக் கடிவாளத்தைத் தனக்குத் தானே மாட்டிக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் நாம் உடைத்தெறியாத வரையில், நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பதுதான் உண்மை.

அசரீரி :

சரி. இதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

தவி :

இதனை சாத்தியமாக்குவதற்காகவே இந்தியத் தமிழர்களான நாம் அனைவரும் ஒன்று கூடவேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மன்மோகன் அரசு மக்கள் சமூகத்திற்கு செவி சாய்க்கும் நிலைமையில் இல்லை.

எனவேதான், அநீதியை நிலைகொள்ளச் செய்யும் இந்திய அரசின் திட்டங்களுக்கு மக்களான நாம் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்பதை உரத்துப் பேச வேண்டும்.

ஈழத்து சொந்தங்களைக் காக்க நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைப்போம் :

*

நான்காம் ஈழப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அதற்குக் காரணம் யார் என்பதைப் பாரபட்சமின்றி அறிந்திட சர்வதேச் குழு ஒன்று அமைக்கப் படல் வேண்டும்.

*

வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும். வன்னியின் பாதுகாப்பு குறித்து அந்நில மக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நடவடிக்கைகளை சிங்கள அரசு எடுக்க வேண்டுமேயொழிய, தன்னிச்சையாக அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீதிக்கான செயல்பாடாக இருக்காது.

*

வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய மேலிருந்து திணிக்கக் கூடாது. எம்.எஸ்.சுவாமிநாதனின் வேளாண் மீள் திட்டமும், இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்திற்கு இலங்கை அரசால் கொடுக்கப்பட்டுள்ள மீள் கட்டுமானத்திற்கான அனுமதியும் மேலிருந்து மேலிருந்து திணிக்கப் படும் செயல்பாடுகளே. அவை வன்னி மக்களால் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகளல்ல. .

*

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தக் குழு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக ஐ.நா.சபையின் தலைமையில் அனைத்துலகத்தையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்ட அதிகாரத்தை உடைய மீள்குடியேற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.

இவை அனைத்தையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும்வரை இந்தியாவில் உள்ள எவரும், அவர் தனி மனிதரோ அல்லது ஒரு நிறுவனமோ, இந்திய அரசு இலங்கையில் மேற்கொள்ளப்போகிற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது. மீறிக் கலந்து கொள்ள முடிவு செய்பவர்களை நாம் சமூக, பொருளாதார, அரசியல் வெளிகளில் ஒதுக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசினை அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தததைத் தூக்கியெறியும் வெகுமக்கள் போராட்டத்தை நாம் உடனடியாகக் கைகொள்ளல் வேண்டும். அப்போதுதான், இந்திய அரசு ஒரு வேளை தன் இலங்கைக் கொள்கையை எதிர் காலத்தில் மாற்றிக் கொண்டால, அது சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கும.


---------------------------------------------------------------------

No comments:

Post a Comment

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது