"இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், அந்நாட்டுக்கு நவீன வேளாண் கருவிகள், விதை ரகங்கள், உரங்கள், பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்ட பின் கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பகுதிகளில் விவசாய தொழிலை மேம்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பயனும் இல்லாமல் காடு பிடித்து கிடக்கும் நிலத்தில் விவசாயத்தை மீண்டும் தழைக்க செய்ய, இந்திய அரசின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய வெளியுறவுத் துறை சார்பில், ஆறு வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழு சமீபத்தில் இலங்கை சென்று வந்தது. இதில், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி மற்றும் நான்கு பேர் தமிழர்கள்.
இலங்கை பயணம் பற்றி துணைவேந்தர் முருகேச பூபதி கூறியதாவது: போருக்குப் பின் இலங்கையின் மறு சீரமைப்புக்கு உதவ இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அங்கு சில பகுதிகளில் விவசாய தொழில் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 23ல் டில்லியில் வெளியுறவுத் துறை சார்பில் முதல் கட்ட கூட்டம் நடந்தது. இதில், இலங்கையில் விவசாயம் செய்ய தேவையானவை பற்றி நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் துணை டைரக்டர் ஜெனரல் திவாரி, கர்நாடகா வேளாண் பல்கலை துணைவேந்தர் செங்கப்பா, தமிழ்நாடு வேளாண் பல்கலை மூத்த பேராசிரியர் பர்வத்தமா உள்ளிட்ட ஆறு பேர் செப்., 16ல் இலங்கை சென்றோம். இவர்களில் நான்கு பேர் தமிழர்கள்.
அங்கு இலங்கை தூதரக அதிகாரி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளுடன் நடந்த பல்வேறு கூட்டங்களில், இந்தியாவில் இருந்து வேளாண் விதை, உரங்கள், நவீன தொழில் நுட்ப கருவிகள் தங்களுக்கு தேவை என்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களுக்கு விவசாய தொழில் செய்ய உதவுவதுதான் நோக்கம். இதற்கென 600 கோடி ரூபாய் திட்டத்தை இலங்கை அரசு வகுத்துள்ளது. தற்போது நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. இந்தியா மற்றும் டென்மார்க் நாட்டு சிறப்பு குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி மாதம் இப்பணிகள் முடிந்த பின் அந்த நிலங்களில் விவசாயம் பயிரிட முடியும்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உடன்பிறந்த சகோதரர் பேசில் ராஜபக்ஷே தற்போது அந்நாட்டு ஆலோசகர் ஆக உள்ளார். அவர், இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியாவையே நம்பியிருப்பதாக தெரிவித்த அவர், விவசாயம் செய்ய தேவையான தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, மண் ஆய்வுக்கான மொபைல் லேப், புதிய பயிர் ரகங்களை அளித்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இலங்கையில், விவசாயம் பயிரிட "மகா' மற்றும் "எல்லா'(சம்பா, குறுவை) ஆகிய இரு சீசன்கள் உள்ளன. அங்குள்ள காலநிலைக்கு பயிர்கள் நூறு சதவீதம் நன்கு விளைய சம்பா சீசன்தான் உகந்தது. அங்கு 42 சதவீத குறுவை பயிர்கள் மழையை நம்பியுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 60 ஆயிரம் ஏக்கர் நிலம் கடந்த 20 ஆண்டுகளாக காடு பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது. அவற்றை அகற்றி சுத்தம் செய்த பின்னரே நிலத்தை விவசாயத்துக்கு தயார் செய்ய முடியும். நெல், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் நிறைய விளைகின்றன. புதிய ரக கத்தரிக்காய் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்தியாவை விட இலங்கையில் அதிக மழை பெய்கிறது. அங்கு மக்கள் தொகை இரண்டு கோடிதான். இதனால், தனி நபர் வருமானம் அதிகம். விவசாயம் செய்தால் அவர்களின் வருமானம் மேலும் பெருகும். இலங்கையில் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் தழைக்க தேவையான விஷயங்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். அதன் அடிப்படையில் அங்குள்ள விவசாயிகளுக்கும், வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் இந்தியாவிலோ, இலங்கையிலோ இந்தியா பயிற்சி அளிப்பது பற்றி இந்திய அரசு முடிவு செய்யும்.இவ்வாறு, துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.
"கனத்த இதயத்துடன் திரும்பினேன்' : துணைவேந்தர் முருகேசபூபதியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலை முன் நேற்று மாலை சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி, பல்கலை முன் காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துணைவேந்தர் முருகேச பூபதியிடம் கேட்டதற்கு, ""தமிழினத்துக்கு எங்கள் பயணம் துரோகம் செய்யவில்லை. அங்கு விவசாயம் செழித்தால் முகாம்களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்கும். இங்கிருந்து அனுப்பும் உதவிகள் அவர்களை சரியாக சென்றடைய இது போன்ற திட்டங்கள் உதவும். வட இலங்கையில் விவசாயத்தை தழைக்க செய்து அங்குள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதே மத்திய,மாநில அரசுகளின் நோக்கம்.""இந்தியா ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாயின் ஒரு பகுதியை, விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள், விதைகள், உரங்கள் என, பொருட்களாக கொடுத்தால் தமிழர்களின் வாழ்வுக்கு அது நேரடி பயன் தரும். தமிழர்களின் தற்போதைய பரிதாப நிலையை கேட்டறிந்து, தமிழன் என்ற நிலையில் அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன்,'' என்றார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை வேளாண் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர்.ப.முருகேசபூபதியும் அவர்தம் கூட்டாளிகளும் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த வன்னித் தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை-இந்திய அரசுகள் உதவலாமேயொழிய மேலிருந்து திணிக்கக் கூடாது. டாக்டர்.ப.முருகேசபூபதி அவர்கள் இங்கு விளக்குகின்ற வேளாண் திட்டமானது சிங்கள அரசால் முன்வைக்கப்பட்டு, மேலிருந்து திணிக்கப் படும் ஒன்றாகும். வன்னி மக்களால் முன்வைக்கப்பட்ட திட்டமல்ல அது.
முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். இதில் முதன்மையானவரே டாகடர்.ப.முருகேசபூபதி அவர்களின் குழு சந்தித்த பசில் ராஜபக்சா. அவரே அந்தப் 19 பேர் கொண்ட குழுவின் தலைவர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தக் குழு உடனடியாகக் கலைக்கப்படுவதே நீதிக்கான செயலாக இருக்கும்.இந்தக் குழுவிற்குப் பதிலாக ஐ.நா.சபையின் தலைமையில் அனைத்துலகத்தையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்ட - அதிகாரத்தை உடைய - மீள்குடியேற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்படுவதே சரியான செயலாக இருக்க முடியும்.
வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவம் காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரம் அவசரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் செயல்பாடுகள் குறித்து வேளாண் அமைச்சர் திரு.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளராக சுமார் பத்தாண்டுகளாக இருந்த டாக்டர்.ப.முருகேசபூபதி அவர்கள் ஏன் குறிப்பிடவில்லை? இந்தக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே நீதிக்கான நடவடிக்கையாக இருக்க முடியும்? வன்னியின் பாதுகாப்பு குறித்து அந்நில மக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நடவடிக்கைகளை சிங்கள அரசு எடுக்க வேண்டுமேயொழிய, தன்னிச்சையாக அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீதிக்கான செயல்பாடாக இருக்காது.
போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அதற்குக் காரணம் யார் என்பதைப் பாரபட்சமின்றி அறிந்திட சர்வதேச் குழு ஒன்று அமைக்கப் படல் வேண்டும் அல்லவா?
இந்தக் கருத்துக்களே பேராசிரியர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களிடம் ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டது.அவர் அதனைப் புரிந்து கொண்ட போது பெரிதும் மனம் வருந்தினார். "இலங்கையில் இன்றைய அரசியல் சூழ்நிலை நீதிக்கான ஒன்றாக இல்லை; அது மாறும் வரை நான் அங்கு போக மாட்டேன் " என்று வெளிப்படையாக அறிவித்தார்.
அவர் கூறிய அரசியல் சூழ்நிலை இன்று மாறிவிடவில்லை.மேலும் தரம் தாழ்ந்தே போயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் வழியைப் பின்பற்றாது, இலங்கை சென்ற ஆறு பேர் குழுவில் நான்கு பேர் தமிழர்கள் இருந்தார்கள் என்பது அவர்கள தமிழ் இனத்திற்கு இழைத்த மாபெரும் துரோகம் என்றே கருதத் தோன்றுகிறது.
சிங்கள இராணுவத்தின் மத்தியில் ஆண் துணையின்றி வேளாண்மையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படவுள்ள நம் இனத்தின் தாய்மார்களுக்கு மானத்தைப் பெற்றுத் தராது அவர்களின் பாழும் உடலை நீட்டிக்கச் செய்யும் பணியினை செய்யப் போகிறோம் என்று அவர் கூறியிருப்பதை யாரிடம் சொல்லி அழுவது?
வன்னி மண்ணின் பெயரைக்கொண்டிருக்கும் சமூகத்தில் பிறந்த டாகடர்.ப.முருகேசபூபதி, டாக்டர்.எம்.பரமாத்மா ஆகியோரும், அவர்களது துறையின் அமைச்சரும், அவர்களை இலங்கை செல்ல அனுமதி அளித்தவருமான திரு.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அவர்களும் இந்த ஈனச் செயலுக்கு எப்படித் துணைபோக முடிவு எடுத்தார்கள் என்பதுதான் நம் அனைவருக்கும் மிகப் பெரும் "கனத்த இதயத்தைக்" ஏற்படுத்துவதாக உள்ளது. (மீதமுள்ள இரண்டு தமிழர்களான பி.ஷ்யாம் மற்றும் கே.விஜயராகவன் ஆகியோரின் பெயர்களை ஏன் அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்? )
பேராசிரியர் சுவாமிநாதன் என்ற அந்தணர் செய்யத் துணியாத ஒரு செயலை இந்த வன்னியச் சிங்கங்கள் ஏன் செய்தன?
17 ஆவது நூற்றாண்டில் மருத நாயகம் என்ற யூசுப் கானைக் காட்டிக்கொடுத்த ஸ்ரீனிவாச ராவ்...18 ஆம் நூற்றாண்டில் மாவீரன் திப்புவைக் காட்டிக்கொடுத்த பூர்ணய்யா... அதே காலகட்டத்தில் தீரன் சின்னமலையைக் காட்டிக்கொடுத்த கரும்பாறை நல்லப்பன்... 19 ஆம் நூற்றாண்டில் மாவீரன் கெட்டி பொம்முவைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமானும், எட்டப்பனும்....20 ஆம் நூற்றாண்டில் இந்திக்காகத் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த சென்னை மாகாணத்தின் முதல் மந்திரி பக்தவச்சலம்... இன்று தமிழ் இனமே இடிந்து நிற்கும் வேளையில் அதனை சிங்கள இனவெறியர்களிடம் காட்டிக் கொடுக்கப் போகும் அரிய பணிக்குத்தான் இவர்கள் வன்னி மண்ணை மிதித்த்திருக்கிறார்களா?
தமிழ் இனத்தின் பூர்வீக மண்ணைக் காட்டிக்கொடுத்து - வரலாற்றின் கறை படிந்த பக்கங்களில் - இவர்கள் தம் பெயரை இணைக்கத்தான் போகிறார்களா?
அன்புடன்
- மாதவி
ur article added here http://www.meenagam.org/?p=11152. plz mail ur articles to this mail id.
ReplyDeletethanks